ஷார்ஜாவில் உள்ள அல் - நாஹ்தா பிரதேசத்தில் அமைந்துள்ள தொடர்மாடிக்
கட்டடத்தின் 22ஆவது மாடியிலிருந்து இலங்கையைச் சேர்ந்த ஆணொருவர் வீழ்ந்து
மரணமடைந்ததை அடுத்து
இலங்கைப் பெண்கள் நால்வர் ஷார்ஜாவின் வழக்குத் தொடுநர் காரியாலய
அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக த நஷனல் நாளிதழ்
தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிரிழந்ததாகக்
கூறப்படும் நபர் மேற்படி தொடர்மாடியில் குறித்த பெண்களுடன் ஒன்றாக வசித்து
வந்திருந்ததாக ஐக்கிய அரபு இராச்சிய வழக்குத் தொடுநர் சலீம் அல் ஸாபி
தெரிவித்தார். இச்சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து அவருடன் கூட வசித்து
வந்த பெண்கள் அனைவரும் தங்கள் அனுசரணையாளர்களுக்கு அறிவிக்காத நிலையில்
தலைமறைவாகியிருந்ததாக நடத்தப்பட்டுள்ள விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக த
நஷனல் நாளிதழின் அரபு மொழி சகோதரப் பத்திரிகையான அல் இத்திஹாட்
தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 24 ஆம் திகதி நள்ளிரவில் இடம்பெற்றிருந்த சம்பவத்தை நேரில்
கண்டிருக்கலாமென நம்பப்பட்ட கோபுரப் பாதுகாப்பு உத்தியோகத்தரும்
தொடர்மாடிக் குடியிருப்பு முகாமையாளரும் விசாரிக்கப்பட்ட பின்னர் தற்போது
இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து அல் - ஸாபி மேலும் கூறுகையில் மேற்படி தொடர்மாடி முகப்பில்
பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்புக் கமெராவில் உயிரிழந்தவரும் குறித்த
பெண்களில் ஒருவரும் தொடர்மாடிக்கு திரும்பி வந்திருந்தமையும் அறைகளுக்குச்
செல்லும் நடைபாதையில் வைத்து அவர் அந்தப் பெண்ணைத் தாக்கியமையும்
பதிவாகியிருந்ததாகவும் தொடர்மாடியின் உள்ளே அதன் பின்னர் என்ன
நடந்ததென்பதைப் பற்றி அதிகாரிகளால் நிச்சயிக்க முடியாமல் இருந்ததாகவும்
குறிப்பிட்டார். இருப்பினும் உயிரிழந்த நபர் மாடியில் முன் பாகத்திலிருந்து
குதித்துள்ளதை சிலர் நேரில் பார்த்துள்ளமைக்கு சாட்சியங்கள் இருப்பதாகவும்
அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்த சட்ட வைத்திய அறிக்கையொன்றை வழக்குத் தொடுநர்
காரியாலயம் எதிர்பார்த்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நான்கு பெண்களும்
விசாரணை பூர்த்தியாகும் வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்படின்
மேற்குறித்த ஆண்கள் இருவரும் அதிகாரிகளால் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்படுவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
