மத நல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தர்களின் குரலை நசுக்காது சர்வதேச ரீதியில் அமைச்சர் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் தலைவர்கள் பௌத்தர்களை பயங்கரவாதிகளாக சித்திரிக்கும் பிரசாரத்தை தடுத்து உண்மையை உலகிற்கு தெளிவுபடுத்த அரசாங்கம் முன்வர வேண்டுமென வலியுறுத்தும் அரசின் பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமய தர்கா நகரில் பௌத்த குருவானவர் தாக்கப்பட்ட செய்தியை இருட்டடிப்பு செய்ததன் பின்னணி என்ன? என்றும் கேள்வியெழுப்பியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
அளுத்கம பேருவளையில் ஏற்பட்ட துர்ப்பாக்கிய சம்பவங்களையடுத்து பௌத்த மக்களுக்கும் பௌத்த குருமார்களுக்கும் மற்றும் பௌத்த அமைப்புகளுக்கும் எதிராக பிரசாரம் உலகம் பூராவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இச்சம்பவத்தின் உண்மை நிலை முற்றாக இருட்டடிப்பு செய்யப்பட்டு பௌத்தர்கள் உலகம் பூராகவும் அவமானப்படுத்தப்படுகின்றார்கள். இதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமை தாங்குவதோடு வேறு சில முஸ்லிம் தலைவர்களும் துணை போகின்றார்கள். இலங்கையில் பௌத்த பயங்கரவாதம் அடிப்படைவாதம் தலை விரித்தாடுவதாக சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டிகளை இவர்கள் வழங்குகின்றனர்.
அத்தோடு இப்பிரச்சினை தொடர்பாக நீதியும் சட்டமும் நியாயமாக அமுலில் இல்லை. பொசான் போயா தினத்தன்று தர்கா நகரில் முஸ்லிம் இளைஞர்கள் மூவர் பௌத்த குரு மீது தாக்குதலை நடத்தினர். இது எவ்வளவு பாரிய கவலைக்குரிய விடயம். ஆனால் இது தொடர்பாக உங்களது ஆட்சியதிகாரத்தின் கீழுள்ள ஊடகத்துறை நடந்துகொண்ட விதம் கவலையளிக்கின்றது.
தேசிய ரீதியில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் இச்சம்பவம் தொடர்பில் பௌத்தர்கள் மீது மட்டுமே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. திட்டமிட்டு எம்மை குற்றவாளிகளாக்கியுள்ளனர்.
ஆனால், பிக்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பில் எந்தவொரு முஸ்லிம் தலைவரோ மதத்தலைவரோ மன்னிப்பு கேட்கவில்லை.
பௌத்தர்களின் கூட்டங்களுக்கு புலனாய்வு பிரிவினர் வந்து செய்தி சேகரிக்கின்றனர். குருமார் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். ஆனால் தர்கா நகரில் அன்றைய தினம் 3,000 மேலான முஸ்லிம்கள் எவ்வாறு பள்ளிவாசலில் கூடினார்கள்? அவர்களது கைகளுக்கு பொல்லுகள் வாள்கள் பெற்றோல்கள் குண்டுகள் ஆயுதங்கள் எப்படி வந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவில்லை.
குரு முஸ்லிம்களால் தாக்கப்பட்டதை இருட்டடிப்பு செய்து அரசுக்கும் பௌத்தர்களுக்கும் எதிராக ஹக்கீம் தலைமையில் முன்னெடுக்கப்படும் பிரசாரம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டதா?தலாய்லாமாவும் முஸ்லிம்களுக்கு சார்பாகவும் பௌத்தர்களுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? ராஜதந்திர ரீதியில் பௌத்தர்களுக்கு எதிரான அபகீர்த்தியை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா?உங்கள் தலைமையின் கீழ் உலகம் முழுவதும் இலங்கையின் பௌத்தர்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர்.எனவே, இதனை தடுக்க ராஜதந்திர மற்றும் தூதரக மட்டத்தில் அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
