பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் வான்வழி தாக்குதலால் பலியானோரின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.
பாலஸ்தீனத்துக்கு
எதிராக நடத்தி வரும் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் புரொடக்டிவ் எட்ஜ்'
(Operation Protective Edge) என இஸ்ரேல் பெயரிட்டுள்ளது.
கடந்த 8ம் திகதி வான்வழி தாக்குதலை காஸா மீது நடத்தத் தொடங்கிய
இஸ்ரேலியப் படைகள் இதுவரை 1000 முறை தாக்குதலை நடத்தியதாக தெரிகின்றது.
இந்த தாக்குதலால் சுமார் 500 வீடுகள் தரைமட்டமாகி, 20 ஆயிரத்துக்கும்
அதிகமான பாலஸ்தீனியர்கள் ஒதுங்க இடமின்றி தவிக்கின்றனர் என்றும் தற்போது
சுமார் 1300 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், காஸா பகுதிக்குள் இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று நடத்திய
தாக்குதலில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளதால் பலியானோர் எண்ணிக்கை
மொத்தம் 184 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த ஒரு வார காலமாக காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும்
தாக்குதலால் பலியானோரின் எண்ணிக்கை கடந்த 2012ம் ஆண்டை விட அதிகமாய்
உள்ளதாக கூறப்படுகிறது.