அப்பம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் சமயல் கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்து
சூடாக்கி, தனது 5 வயது மகளின் கன்னத்திற்கும் உதடுக்கும் சூடு வைத்து
துஷ்பிர செய்ததாக கூறப்படும் தாயை குருவிட்ட பொலிஸார் செவ்வாய்க்கிழமை (15)
கைது செய்துள்ளனர்.பாதிக்கப்பட்ட சிறுமி எரத்ன கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
சிறுவர் மற்றும் பெண்களுக்கான பணியகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர், எரத்ன தெற்கு அடவிகந்தவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பம் குறித்து தெரியவருவதாவது,
கடந்த எசல போய தினத்தன்று சந்தேக நபரான சிறுமியின் தாய், அப்பம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் கரண்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தனது மகளின் வலது கன்னம், உதடு மற்றும் வலது கைக்கு சூடு வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் தான் 7 மாதங்களுக்கு முன்னர் வெலிமடையில் இருந்து வந்ததாகவும் எரத்னவில் உள்ள ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலையில் தொழில் புரிவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது மகள் முறைகேடான சொற்களை பிரயோகித்து பேசியதற்கு தண்டணையகவே இவ்வாறு சூடு வைத்ததாக மேலும் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் சட்டரீதியாக திருமணம் முடிக்காதவர் என்றும் இத்தனை காலம் வாழ்ந்த ஒருவருடன் 5 குழந்தைகளுக்கு தாயானதாகவும் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற தனது மகளுக்கு சுடுநீர் பட்டதாலேயே பாதிக்கப்பட்டுள்ளார் என்று சந்தேக நபரான தாய் வைத்தியசாலை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி மற்றும் அவரது சகோதரிகள் அனைவரும் வேறுபட்ட மூன்று சிறுவர் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பரிசோதகருமான ஆர்.பி.சிறிவர்தன மேற்கொண்டு வருவதாகவும் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.